Thursday, August 16, 2012


இனி, வாசகிகளின் சில முக்கிய கேள்விகளும் டாக்டர் பதில்களும்


பேப் ஸ்மியர் டெஸ்ட்
எனக்கு வயது 34. இரண்டு குழந்தைகள். சமீபகாலமாக உடலுறவு முடிந்தபின் மாதவிலக்கு போன்று ரத்தப்போக்கு ஏற்படுகிறது. டாக்டரிடம் சென்றபோது 'கர்ப்பப் பையில் கோளாறு இருக்கலாம். பேப் ஸ்மியர் டெஸ்ட் எடுக்க வேண்டும்' என்றார். அப்புறம் பார்க்கலாம் என்று வந்துவிட்டேன். பேப் ஸ்மியர் டெஸ்ட் என்றால் என்ன? உதிரப்போக்கு பிரச்னைக்கு கட்டாயம் இந்த பரிசோதனையை செய்யத்தான் வேண்டுமா?
பேப் ஸ்மியர் என்பது கர்ப்பப்பை கழுத்து, கர்ப்பப்பைவாய் புற்று நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்கான பரிசோதனை. மிகச் சுலபமாக, 10 நிமிடத்தில் செய்துவிடலாம். சோதனை செய்யவிருக்கும் இடங்களில் மருந்தோ, தண்ணீரோ பட்டிருக்கக் கூடாது. மாத விலக்கின்போது இந்த சோதனையை செய்யக்கூடாது. ஐஸ்க்ரீம் குச்சி போன்ற ஒன்றை கர்ப்பப்பை கழுத்தில் லேசாக தடவினால் அங்குள்ள திசுக்கள் அதில் ஒட்டிக்கொள்ளும். அதனை ஒரு கண்ணாடித் தட்டில் தடவி மருந்திட்டு மைக்ரோஸ்கோப் மூலம் பார்த்தால் புற்றுநோய் வர வாய்ப்புள்ள திசுக்கள் உள்ளதா, புற்றுநோய்க்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதா என்பதை துல்லியமாக சொல்லலாம். இவ்வளவு எளிதான ஒரு பரிசோதனை முறை இருந்தும் கர்ப்பப்பைவாய் புற்றுநோய் முற்றிய நிலையில் வரும் பெண்களின் எண்ணிக்கைதான் அதிகம்! 30 வயது தாண்டியவர்கள் இந்த டெஸ்ட்டை வருடம் ஒரு முறை செய்து கொள்வது நல்லது. உடலுறவுக்குப் பின் உதிரம் பட்டால் அது கர்ப்பபை புற்று நோயின் ஆரம்பகால அறிகுறியாக இருக்கலாம். அத்தகைய ரத்தப் போக்கு ஏற்படுவது தொடர்ந்தால் கட்டாயம் இந்த சோதனை செய்தாக வேண்டும்.

பிறப்புறுப்பு சுத்தம்
எனக்கு திருமணமாகி 15 நாள் ஆகிறது. மாதவிலக்காகி 20 நாளுக்குள் மீண்டும் ரத்தப்போக்கு விட்டுவிட்டு வந்து கொண்டே இருக்கிறது. இதுவரை இப்படி ஆனதில்லை. பயமாயிருக்கிறது. என்ன செய்ய வேண்டும்? இது மாதவிலக்கு ரத்தப்போக்காக இருக்காது. உடலுறவால் ஏற்பட்ட காயம், அந்தக் காயத்தின் மீது கிருமிகளின் தாக்குதலால் (Infection) இருக்கலாம். பரிசோதித்து மருந்து களிம்பு மூலம் குணப்படுத்தலாம். நிறைய தண்ணீர் குடிப்பது அவசியம். உடை சுத்தமாக இருக்கவேண்டும். பிறப்புறுப்பை தூய்மையாக வைத்துக் கொள்வதும் அவசியம். உடலுறவுக்குப் பின் அவசியம் சுத்தம் செய்யுங்கள்.

2 ஆண்டுக்கு ஒரு முறை டெஸ்ட்
மாதவிலக்கு தொந்தரவுக்காக டாக்டரை பார்த்தேன். பேப் ஸ்மியர் டெஸ்ட் செய்து அதில் வித்தியாசம் இருந்ததால் Colposcopy and Biopsy செய்து கொள்ள சொல்கிறார். அவசியமா? 
கர்ப்பப்பை வாய் புற்றுநோய் (Cervical Cancer) வருமுன், அதில் ஏற்படும் வித்தியாசங்களை அறிய பேப் ஸ்மியர் பரிசோதனை உதவுகிறது. அதன் பிறகு Colposcopy & Biopsy அவசியமாகிறது. பல மடங்கு பெரிது படுத்தி காண்பிக்கும் லென்ஸ் பொருத்திய Colposcope இல் பார்ப்பதால் மிகச் சிறிய மாற்றத்தையும் ஆராய முடியும். அதிலிருந்து சதையை எடுத்து பரிசோதிப்பது (Biopsy) எந்த வகையான சிகிச்சை தேவைப்படும் என்பதை தீர்மானிக்க உதவும். ஒவ்வொருவரும் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை இதை செய்துகொள்வது நோயை தடுக்க உதவும்.

மார்பில் பால் போல் திரவம்
எனக்கு திருமணமாகி மூன்று வருடம் ஆகிறது. குழந்தை இல்லை. கடந்த ஒரு வருடமாக மாதவிலக்கே வருவதில்லை. அடிக்கடி மார்பிலிருந்து பால் போன்ற திரவம் கசிகிறது. இது எதனால் ஏற்படுகிறது? இதற்கும் கருத்தரிக்காமல் இருப்பதற்கும் சம்பந்தம் உண்டா? 
ப்ரோலேக்டீன் என்ற ஹார்மோனின் அளவு அதிகரிப்பதே இதற்கு காரணம். இந்த ஹார்மோன், மார்பக ரத்த நாளங்களில் வேலை செய்து பால் சுரக்க வைக்கிறது. ப்ரோலேக்டீன் அதிகம் இருந்தால் அது மாதவிலக்கு சுழற்சியை பாதிக்கும். சினைப்பையில் சினை முட்டைக் குமிழ்கள் ஏற்படாதபடி இவை தடுக்கின்றன. அதனால் மாதவிலக்கும் வராது. கரு உருவாகாததற்கு இதுவும் முக்கிய காரணம். ப்ரோலேக்டின் அளவை குறைக்க மருந்துகள் உள்ளன. டாக்டர் ஆலோசனைப்படி சாப்பிடுங்கள்.

குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன்
என் வயது 48. மூன்று குழந்தைகள் உள்ளன. குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டேன். இரண்டு மாதங்களாக விட்டுவிட்டு மாதவிலக்கு வந்து கொண்டிருக்கிறது. இது புற்றுநோய்க்கு அறிகுறியோ என்று பயமாக இருக்கிறது. 
இந்த வயதில் சினைப்பையில் கரு முட்டை உற்பத்தி குறைந்துவிடும். தேவையான ஹார்மோன் இல்லாததால் விட்டுவிட்டு விலக்காகலாம். ஆனால் கர்ப்பப்பையில் கட்டி, புற்று போன்றவை இருக்கிறதா என்பதை Pap smear /scan, Endometrial Biopsy ஆகிய சோதனைகள் மூலம் அறிந்து உடனடி சிகிச்சை மூலம் குணப்படுத் தலாம்.

மார்பகத்தில் மாற்றங்கள்
எனக்கு மாதவிலக்கு வருமுன் மார்பகம் பருத்து குத்துவலி எடுக்கிறது. விலக்கானதும் சரியாகி விடுகிறது. எதனால் இப்படி ஆகிறது? சிகிச்சையில் குணமாகுமா? 
மாதவிலக்கின்போது மார்பகத்தில் மாற்றம் ஏற்படுவது சகஜம். பெரிதாவதும் கல்போல கடினமாவதும், கை வைத்துப் பார்த்தால் உள்ளே சிறுசிறு கோளங்கள் இருப்பது போல ஒரு உணர்வும் வலியும் கூட ஏற்படும். ஈஸ்ட்ரோஜன், ப்ரொ ஜெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன்கள் மாத விலக்குக்கு 3-4 நாளுக்குமுன் ரத்தத்தில் அதிக அளவு காணப்படும். அவை மார்பகத்துக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரித்து அதன் மூலம் உடலில் நீர் கோர்ப்பதால் இந்த மாற்றங்கள் ஏற்படுகின்றன. மாதவிலக்கு ஏற்பட்டவுடன் இந்த ஹார்மோன்களின் அளவு குறைவதால் மார்பகம் பழைய நிலைக்கு வந்துவிடும். சில சமயம் பழைய நிலையை அடைய 7 நாள் கூட ஆகலாம். இதற்கு சிகிச்சை என்று தனியாக எதுவும் தேவையில்லை. வலி அதிகமானால் வலி நிவாரணிகளை நாடலாம்.

ஊசி மூலம் தடுப்பது
டெபோ ப்ரோவேரா (DEPO-PROVERA) பற்றி கேள்விப்பட்டேன். இந்த ஊசியை போட்டுக் கொண்டால் மாதவிலக்கே வராது என்கிறார்களே, இப்படி ஊசி மூலம் மாதவிலக்கை நிறுத்தி வைப்பதால் உடல் நலத்துக்கு பாதகமில்லையா? எல்லோரும் இந்த ஊசியை போட்டுக் கொள்ளலாமா? பக்க விளைவுகள் ஏற்படுமா? டெபோ-ப்ரோவேரா எனும் மருந்தை ஊசிமூலம் உடலில் செலுத்தினால் அது மூன்று மாத காலத்துக்கு கொஞ்சம் கொஞ்சமாக ரத்தத்தில் கலந்து மாத விலக்கு சுழற்சி மற்றும் கருமுட்டை உருவாவதை தடுத்து கருத்தடையை ஏற்படுத்துகிறது. இதனால் மாத விலக்கு வராமல் அல்லது குறைவாக இருக்கும். சில சமயம் அந்த நாட்களில் வரும் வயிற்றுவலியும் குறையும். இந்த ஊசியினால் சிலருக்கு மாதவிலக்கு முற்றிலுமாக நிற்காமல், முறைப்படி இல்லாமல் அவ்வப்போது வருவது, மன அழுத்தம், வாந்தி, மார்புவலி போன்ற பக்க விளைவுகள் வரலாம். மறுபடி குழந்தை வேண்டுமென்று இந்த மருந்தை நிறுத்தினாலும் கரு உருவாவது தாமதப்படலாம். சிலருக்கு இந்த மருந்து அலர்ஜியாகலாம். அதிக உதிரப் போக்குக்கான காரணத்தை கண்டுபிடிக்க முடியாத சூழ்நிலையில் உள்ளவர்கள் இதனை உபயோகிக்கக் கூடாது.

ஆபரேஷன் மீது பயம்
எனக்கு வயது 37. மணமாகி, இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த இரண்டு மூன்று மாதங்களாக எனக்கு அந்த மூன்று நாட்களில் அதிகளவு உதிரப்போக்கு ஏற்படுகிறது. டாக்டரிடம் காண்பித்தால் ஆபரேஷன் பண்ண சொல்லிவிடுவாரோ என்று பயமாக இருக்கிறது. ஆபரேஷன் இல்லாமல் இதனை சரிப்படுத்த வழி உள்ளதா? எதனால் உதிரப்போக்கில் திடீர் மாறுபாடு ஏற்படுகிறது? 
கர்ப்பப்பையின் உள் சுவரை ஒட்டியிருக்கும் ஜவ்வு, ஹார்மோன் சுரப்பின் போது கரைந்து வெளியே வரவேண்டும். சில சமயம் முழுவதுமாக கரையாமல் வழக்கமான அளவுக்கு மேல் வளர்ந்து தடித்துவிடுகிற நிலையில் அதிக உதிரப் போக்கு ஏற்படும். தவிர, உள்வரி ஜவ்வு இடம் மாறி அமைவதால் உண்டாகும் எண்டோமெட்ரியோஸிஸ் என்ற நோய் ஏற்பட்டாலோ, வேறு காரணங்களே இல்லாமல் ஹார்மோன்கள் சரிவர இயங்காமல் இருந்தாலோ, உள் சுவரில் பாலிப், ஃபைப்ராய்ட் போன்ற கட்டிகள் இருந்தாலோ அல்லது கர்ப்பப்பை புற்று நோய் இருந்தாலோ அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படலாம். இவ்வாறான உடல் மாற்றங்கள்தான் என்றில்லை, டென்ஷன், பயம், குழப்பம் போன்ற மன உளைச்சல்களும்கூட அதிக உதிரப்போக்கை ஏற்படுத்தும்.
அதிகப்படியான உதிரப்போக்குக்கு முன்பு ஆபரேஷன் மட்டுமே தீர்வாக இருந்தது. இப்போது கர்ப்பப்பையில் பெரிய கட்டிகள் இருந்தால் மட்டுமே ஆபரேஷன் தேவை என்ற வகையில் பல வழி முறைகள் உள்ளன. சிறிய கட்டிகள் இருந்தால் லேசர் ட்ரீட்மென்ட் அல்லது எலக்ட்ரோ சர்ஜரி மூலமே சரிப்படுத்தி விடலாம். கர்ப்பப்பையை சுற்றியுள்ள சிறு கட்டிகள் குறிப்பாக உள்சுவர் கட்டிகள்தான் அதிகளவு உதிரப்போக்கை ஏற்படுத்துகின்றன. கர்ப்பப்பைவாய் வழியாக எலக்ட்ரோடை செலுத்தி கட்டிகளை கரைப்பதன் மூலம் இப்பிரச்னைக்கு விரைவான நிவாரணம் கிடைக்கிறது. கட்டிகள் இல்லை. ஆனால் அதிக ரத்தப் போக்கு என்றால் எளிய மற்றும் நவீன சிகிச்சையான யூட்ரஸ் பலூன் தெரபி மூலம் குணமடையலாம். கர்ப்பப்பைவாய் வழியாக பலூனை உள்ளே நுழைத்து செய்யப்படும் சிகிச்சை இது. பலூனிற்குள் வெப்பக் காற்றை செலுத்தி, விரிவடைந்த பலூன் மூலம் அதிகப்படியான ரத்தத்தை வரவைக்கும் திசுக்கள் அழிக்கப்படும். குழந்தை பிறந்து, இனி குழந்தை வேண்டாம் என்று நினைப்பவர்களும், மெனோபாஸிற்கு முந்தைய நிலையில் இருப்பவர்களும் இந்த சிகிச்சையை செய்துகொள்ளலாம்.

மருந்துகளால் முடியும்
எனக்கு 33 வயது. அதிக ரத்தப்போக்கு இருந்ததால் டாக்டர் D & C செய்தார். கட்டி எதுவும் இல்லை என்று ஸ்கேனில் தெரிந்தது. Simple Endomeòtrial Hyperplasia என்ற நோய் இருப்பதால் கர்ப்பப்பை நீக்கும் ஆபரேஷன் செய்துகொள்ள சொன்னார். மருந்து மாத்திரைகளால் இதை சரிசெய்ய முடியாதா? 
முடியும். Dysfunctional Uterine Bleeding (DUB) என்ற மாதவிலக்கு நோய்க்கு ஹார்மோன் மாத்திரைகளை மருத்துவ ஆலோசனையின்படி 3-6 மாதம் உட்கொண்டால் குணமடைய வாய்ப்புண்டு. ஆனால் முறையாக ஸ்கேன் தேவைப்பட்டால் Endometrial Biopsy செய்துகொள்ள வேண்டியது அவசியம். சரியாகவில்லை என்றால் ஆபரேஷன் அல்லது மாற்றுமுறை சிகிச்சை தேவைப்படும்.

என் வயது 20. இரண்டு வருடமாக மாதா மாதம் விலக்காவதில்லை. இதனால் கட்டி ஏற்பட வாயப்புண்டா? திருமணம் செய்து கொள்ளலாமா? தாம்பத்ய உறவு, குழந்தை பிறப்பு ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படுமா? 
சீதோஷ்ணம், டைபாய்டு, காசநோய், வைரஸ் போன்ற ஏதாவது ஒரு பாதிப்பால் உடல் பலவீனமாகியோ அல்லது மன அழுத்தம் காரணமாகவோ மாதவிலக்கு நின்று நின்று வரலாம். சரியாக வராவிட்டால் கட்டிதான் என அர்த்தமில்லை. திருமணம் செய்துகொள்ளலாம். தாம்பத்ய உறவு, குழந்தை பெறுதல் ஆகியவற்றுக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை.

பிறப்புறுப்பில் அரிப்பு
மாதவிலக்கு முடிந்து நாலைந்து நாட்களுக்கு பிறப்புறுப்பில் அரிப்பு ஏற்படுகிறது. ஏன்? என்ன செய்வது? 
நீங்கள் உபயோகிக்கும் துணி பாதுகாப்பானதாக, சுத்தமாக, 100% பருத்தியினால் ஆனதாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அரிக்கும். மாற்றிப் பாருங்கள். பலன் கிடைக்கும்.

பிசிஓடி ஒரு நோயல்ல
மகளுக்கு 23 வயது. மாதவிலக்கு ஒழுங்கின்மையால் டாக்டரிடம் சென்ற போது அவளுக்கு PCOD இருப்பதாக கூறினார். இதனால் குழந்தை பிறப்பது பாதிக்குமா?
இது ஒரு நோயல்ல, குறைபாடுதான். சினைமுட்டைகள் வெளியேறாத காரணத்தால் உண்டாவது. இந்த பிரச்னை பல வயதிலும் பெண்களை பாதிக்கலாம். அந்தந்த வயதில் தேவைப்படும் மருந்துகளோடு, உடற் பயிற்சி செய்வது, எடை குறைப்பது போன்ற முறைகளை கடைப்பிடித்தால் கருத்தரிப்பதிலோ குழந்தை பிறப்பதிலோ பிரச்னை வராமல் தடுக்கலாம். மாதவிலக்கையும் ஒழுங்குபடுத்தலாம்.

ஹார்மோன் மாத்திரையும் எடையும்
எனக்கு PCOD நோய்க்காக ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிட சொன்னார் டாக்டர். இதனால் உடல் பருமனாகிவிடுமா? 
PCOD இருந்தால் உடல் பருமன் ஆகும் வாய்ப்பு அதிகம். மாத விலக்கை சீர்படுத்த கொடுக்கப்படும் Low Dose ஹார்மோன் மாத்திரை களால் பருமன் அதிகரிக்கும் வாய்ப்பு குறைவுதான்.

காப்பர் டி வேண்டாம்
அடிக்கடி வயிறுவலி, அதிக ரத்தப் போக்கு என்று டாக்டரிடம் சென்றேன். எனக்கு Pelvic Inflammatory Disease(கிருமிகள் பாதிப்பு) இருப்பதாக கூறி மருந்துகள் கொடுத்து சரி செய்தார். அடுத்த குழந்தையை தள்ளிப்போட எந்த கருத்தடை முறை நல்லது? 
கருத்தடை மாத்திரைகள் அல்லது Depo Provera என்ற மூன்று மாதத்துக்கொருமுறை போடும் ஊசி பயன்படுத்தலாம். காப்பர் டீயை தவிர்ப்பது நல்லது. ஏற்கனவே உள்ள பாதிப்பை அது அதிகமாக்கும்.

அதிகமான வயிற்றுவலி
என் வயது 25. மாதவிலக்கு நாட்களில் எனக்கு அதிக வயிற்றுவலி இருக்கிறது. எதனால் இந்த வலி ஏற்படுகிறது? இதற்கு நிவாரணிகளை உபயோகிக்க லாமா? 
மாதவிலக்கு நாட்களில் தாங்கக்கூடிய வயிற்று வலிவருவது இயற்கையே. ப்ராஸ்டோகிளாண்டின் (Prostoglandin) போன்ற ஹார்மோன்கள் சுரப்பதாலும், உள்ளே இருக்கும் உதிரத்தை வெளியே அனுப்புவதற்காக கர்ப்பப்பை பிசைந்து கொடுப்பதாலும் இத்தகைய வலி ஏற்படுகிறது. ஆனால் அந்த வலி நமது அன்றாட வாழ்க்கையை பாதிக்கும் நிலை இருந்தாலோ அல்லது வலியுடன் சேர்த்து அதிக உதிரப்போக்கு ஏற்பட்டாலோ அதன் காரணத்தை கண்டறிந்து சிகிச்சை பெறுவது நலம். உங்கள் வயது 25. பூப்பெய்தும் காலத்தில் ஏற்படும் இந்த வலி சுமார் 25 வயதில் ஏறக்குறைய சரியாகி விடும். திருமணமும், குழந்தை பிறப்பும் இந்த வலியை நிவர்த்தி செய்துவிடும் என்பது விஞ்ஞானபூர்வமாகவும் அறியப் பட்டுள்ளது. வலியை சகிக்கும் தன்மை உங்களுக்கு குறைவாக இருந்தால் வலி அதிகமாக தெரியும். அந்த நாட்களில் ஒரே இடத்தில் தனிமையில் அழுது கொண்டிராமல் கவனத்தை திசை திருப்பினால் நிம்மதி. இது மனோ ரீதியான ஒரு தீர்வு.

கலர் பற்றி கவலை வேண்டாம்
எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. மாதவிலக்கின்போது ஒவ்வொரு முறையும் 3 முதல் 5 மணி நேரம் பயங்கர வயிற்று வலியால் அவதிப்படுகிறேன். டாக்டரின் ஆலோசனைப்படி முதல் நாள் மட்டும் இரண்டு Bolonex OT மாத்திரையை தண்ணீரில் கரைத்து சாப்பிட்டேன். வலி குறைந்தது. ஆனால், அதன் பிறகு வந்த மாதங்களில் ரத்தம் பிரவுன் கலரில் இருக்கிறது. அளவும் கால்பங்காக குறைந்து விட்டது. முதல் 12 மணி நேரம் பிரவுன் கலராகவும் அடுத்த 12 மணி நேரம் சிவப்பாகவும் இருக்கிறது. கை, கால் சோர்வு வேறு. விலக்கான முதல் 5 மணி நேரத்திற்கு எது சாப்பிட்டாலும் வாந்தி வருகிறது. இதனால் மணமான பின் குழந்தை பிறப்பில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமா? மாதவிலக்கை நினைத்தாலே எனக்கு பயமாக இருக்கிறது.
மாத விலக்கின் போது முதல் 3 முதல் 5 மணி நேரம் வயிற்று வலி ஏற்படுவது சகஜம்தான். வலி நிவாரணி சாப்பிடு வதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதையே பழக்கமாக்கி விடாதீர்கள். பிரவுன் கலரில் வருவதற்கும், ரத்தப்போக்கு குறைந்த தற்கும் அந்த மாத்திரை காரணமல்ல. முதல் 12 மணி நேரம் பிரவுன் கலராக வும், அடுத்த 12 மணி நேரம் சிவப்பாக வும் இருப்பது பற்றி கவலைப்படாதீர்கள். முதலில் வெளியே வரும் உதிரமானது கருப்பையின் உள்ளே இருக்கும் சதை, ஜவ்வு, ரத்தம் எல்லாம் கலந்து கலர் அப்படித்தான் இருக்கும். பின்பு உதிரம் மட்டும் வெளியே வருவதால் சிவப்பு. பயத்தை விரட்டுங்கள். சாப்பிடுவது, தூங்குவதுபோல இது சாதாரண நிகழ்வு. அந்த நேரத்தில் உங்கள் கவனத்தை வேறு வேலை, பாட்டு போன்ற வற்றில் திருப்புங்கள். உங்களுக்குத்தான் பிரச்னையே இல்லையே. மணமான பிறகு என்ன சிக்கல் வந்துவிடப் போகிறது?

கருத்தரிக்க நல்ல நாள்
நான் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகிறேன். எனக்கு மாதவிலக்குக்கு முன் 10 நாட்கள் முதுகு வலி (லோயர் பேக்) கால், மார்பு வலி ஏற்படுகிறது. கருத்தரித்த பிறகும் இப்படி இருக்குமா? முதுகு வலி, கால் வலி ஏற்பட்டவுடன் மனதில் சோர்வும் ஏற்படுகிறது. இந்த சூழ் நிலையில் கருத்தரிக்க முடியாது என்று நினைக்கிறேன். எந்த நாட்களில் உறவு வைத்துக் கொண்டால் கருத்தரிக்கலாம். (26-28 நாட்களில் கரெக்டாக வந்து விடுகிறது). 
சரியான சுழற்சியில் மாதவிலக்கு வருவதால் கருத்தரிப்பதில் பிரச்னை இருக்காது. முதுகு, கால், மார்பு வலி என்பதெல்லாம் சாதாரணம். சோர்வும் அப்படியே. இந்த சூழ்நிலையில் கருத் தரிக்க முடியாது என்பது வீண் பயம். கருத்தரித்த பிறகு வலி, சோர்வெல்லாம் இருக்காது. மாதவிலக்கான நாளிலிருந்து 12 முதல் 16-ம் நாள் வரை உறவு வைத்துக் கொண்டால் கருத்தரிக்க மிக அதிக வாய்ப்பு உள்ளது. முதல் 9 நாட்கள் கடைசி 10 நாட்கள் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவு. இடைப்பட்ட நாட்களில் வாய்ப்பு அதிகம்.

வயிறு உப்புசம்
ஒவ்வொரு முறையும் எனக்கு மாதவிலக்கு வருவதற்கு முன் வயிறு உப்புசமாகி விடுகிறது? எதனால் இப்படியாகிறது? மருந்துகள் மூலம் சரிப்படுத்த முடியுமா? 
இது சாதாரண பிரச்னைதான். வயிறு உப்புசம் மட்டுமின்றி உடல் முழுவதும் நீர் கோத்திருப்பது போன்ற உணர்வு, பேதி, வாந்தி, குமட்டல் போன்ற உணர்வுகளும் ஏற்படும். மாதவிலக்கின் போது உடலில் ஏற்படும் மாற்றங்கள் இவை என விஞ்ஞான ரீதியிலேயே கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு காரணம் மாதவிலக்குக்காக உடலில் சுரக்கும் ஹார்மோன் மாறுபாடு. எனவே, கவலைப்பட வேண்டாம். தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் மருத்துவரின் உதவியோடு நிவாரணிகளை நாடலாம்.

கர்ப்பப்பை பலவீனம்
மாதவிலக்கு 3, 4 நாட்களுக்கு மேல் நீடித்தால் கர்ப்பப்பை பலவீனத்தை காட்டுகிறதா? கர்ப்பப்பை பலவீனமானால் குழந்தை பிறப்பு பாதிக்குமா? 
சாதாரணமாகவே மாதவிலக்கின் போது 6 நாட்கள் ரத்தப்போக்கு இருக்கலாம். அதுவே சாதாரணம் என்கிற போது, மூன்று நான்கு நாட்களை பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள். இதனால் கர்ப்பப்பை நிச்சயம் பலவீனமடையாது. குழந்தை பிறப்பிலும் பாதிப்பு இருக்காது.

என் வயது 21. மாதவிலக்கு ஒழுங்காக வருவதில்லை. சில மாதம் 28 நாட்களிலும் சில சமயம் 30, 32, 35, 38 என்றும் அதிகரித்துக் கொண்டே போகிறது. இதனால் உடல் பாதிப்பு ஏற்படுமா? 
வயது 21தான். பெரிதாக கவலைப்பட வேண்டாம். நாட்கள் அதிகமானாலும், எப்படியாவது சுழற்சி சரியாகிவிடும். இது 25 வயதிற்கு உட்பட்ட வயதில் சாதாரணமானதுதான். ஹார்மோன்களின் சுழற்சி, வேகம் போன்றவை சில மாற்றங்களுக்கும் சில தடைகளுக்கும் உட்படுவதால் இவை நேரலாம். மிக சரியான சுழற்சி வேண்டுமென்றால் ஹார்மோன் டெஸ்ட் மற்றும் மருத்துவரின் ஆலோசனையை அணுகலாம். உடல் நலத்தில் இதனால் பெரிய பாதிப்பு ஏதும் நிச்சயம் ஏற்படாது.

வெள்ளைப்படுதல் துர்நாற்றம்
எனக்கு வயது 37. எனக்கு மாதவிலக்கு முடிந்த பிறகு வெள்ளை அதிகம் படுகிறது. துர்நாற்றமும், லேசான அரிப்பும் இருக்கிறது. எதனால் இந்த பிரச்னைகள்? இதனை சரி செய்வது எப்படி? 
மாதவிலக்கு முடிந்த பிறகு சிறிதளவு வெள்ளைப்படுவது சகஜம்தான். ஆனால் அரிப்பு, துர்நாற்றம் இருப்பதால் இது நிச்சயம் கிருமிகளின் தாக்கத்தைக் குறிக்கிறது. நாப்கின்களை சுத்தமாக உபயோகிப்பதும், அடிக்கடி பிறப்புறுப்பை சுத்தம் செய்வதும் நோயிலிருந்து காப்பாற்றும். உடனடி நிவாரணத்துக்கு மருத்துவரை அணுகி கிருமிகளை கட்டுப்படுத்தும் மருந்து வாங்கி பயன்படுத்தினால் இந்த தொல்லையிலிருந்து விடுபடலாம். உங்களுக்கு 37 வயது என்பதால் எதற்கும் Sugar டெஸ்ட் செய்வது நல்லது. சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இந்த தொந்தரவு அதிகம் உண்டு.

கீரை, பழம் சாப்பிடுங்க
எனக்கு மாதவிலக்குக்கு நான்கு நாட்களுக்கு முன்பு வெள்ளைப்படுவது போல சிவப்பு படுகிறது. வெள்ளைப்படுதலும் உண்டு. இதனால் குழந்தை பிறப்பில் பாதிப்பு உண்டாகுமா? எனக்கு வயது 24. மணமாகி 8 மாதங்களாகின்றன. இதுவரை கரு உருவாகவில்லை. மருத்துவரிடம் காண்பித்தால் ஹீமோகுளோபின் 7.4 எம்.ஜிதான் உள்ளது என்று இரும்புச் சத்து மாத்திரைகள் எடுத்துக் கொள்ளச் சொன்னார். ஆனால் மாதவிலக்கான 22 நாட்களில் வாந்தி வருவதுபோல இருக்கிறது. (31-ம் நாள் கரெக்ட்டாக பீரியட்ஸ் வந்து விடுகிறது.) இதனை சரிப்படுத்துவது எப்படி? வெள்ளைபடுதல் ஆபத்தா?
மாதவிலக்கு நாட்களுக்கு முன்பு லேசான ரத்தம் கலந்து வெள்ளைப் படுவது பொதுவான விஷயம்தான். மாத விலக்காக போகிறது என்பதற்கான அறிகுறிதான். இதனால் குழந்தை பிறப்பில் எந்த பாதிப்பும் ஏற்படாது. மணமாகி 8 மாதங்களே ஆனதால் கரு உருவாகவில்லை என்று கவலைப்பட வேண்டாம். சேர்ந்து வாழ்ந்து 1 வருடத்திற்கு பிறகும் கருத்தரிக்கவில்லை என்றால் டாக்டரை பார்க்கலாம். ஹீமோ குளோபின் 7.4 எம்.ஜி. என்பது சற்று கவலை தரக்கூடிய விஷயம்தான். மாத்திரைகளை மட்டும் நம்பாமல், இரும்புச் சத்துள்ள கீரை, காய்கறி, பேரீச்சம்பழம், வெல்லம் போன்றவை சாப்பிடுங்கள். வாந்தி பற்றியும் கவலை தேவையில்லை. சுழற்சி சரியாகவே இருக்கிறது. அரிப்போ, நாற்றமோ இல்லாத வெள்ளைப் போக்கால் எந்த பாதிப்பும் இல்லை. அது இயற்கையே.

கல் போல கட்டிகள் மாதவிலக்கான மூன்று நாட்களும் கட்டி கட்டியாக, கல் போலவும், அதிகமாகவும் போகிறது. விலக்கில்லாத நாட்களில் வெள்ளைநிற ஜவ்வு போல வெளியேறுகிறது. இது எதனால்? சிகிச்சை தேவையா? 
மாதவிலக்கு எப்போதும் திரவமாக போவதுதான் சரி. கர்ப்பப்பையின் உள்ளே கட்டியாக ஏற்படும் மாதவிலக்கு சில மாற்றங்களால் திரவமாக்கப்பட்டு வெளிவரும். கட்டியாக வெளிப்படுவது உதிரப்போக்கு அதிகமாக இருப்பதையும், அந்த மாற்றங்கள் ஏற்படாமலே வெளியே வந்துவிடுகிறது என்பதையும் காண்பிக்கிறது. இதற்கு சிகிச்சை தேவை. எதனால் ஏற்படுகிறது என்பதை தெரிந்து சிகிச்சை பெற வேண்டும். கர்ப்பப்பையில் கட்டி இருந்தால்கூட உதிரம் கட்டியாக வெளிவரலாம். ஸ்கேன் செய்து பாருங்கள்.

மாத்திரைகளின் பக்க விளைவுகள் 
மாதவிலக்கு கோளாறுகளுக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரை, மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படுமா? (குழந்தை பிறப்பு, கர்ப்பம் அடைவதில் பாதிப்பு இப்படி..) விளக்கமாக கூறுங்கள். 
மாதவிலக்கு கோளாறுகள் பலவிதம். சுழற்சி சரியில்லாமல் இருக்கலாம். சரியாக இருந்தாலும் உதிரப்போக்கு அதிக மாகவோ, குறைவாகவோ இருக்கலாம். அல்லது சுழற்சியே இல்லாமல் அவ்வப்போது உதிரப்போக்கு ஏற்படலாம். எப்படி இருந்தாலும் சிகிச்சை பெறுவது நல்லது. பக்க விளைவுகளைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம். கோளாறு களுக்கு காரணம் கண்டறிந்து சரி செய்துவிட்டால், கர்ப்பமடைவதிலோ குழந்தை பிறப்பிலோ எந்த பாதிப்பும் ஏற்படாது.

கர்ப்பப்பை நீக்கியும் உதிரப்போக்கு
என் வயது 40. கோளாறு இருந்ததால் கர்ப்பப்பையை நீக்கிவிட்டேன். இப்போதும் மாதா மாதம் ரத்தப் போக்கு உள்ளது. எப்படி? இதனால் உடல்நலக் குறைபாடு ஏற்படுமா? 
சினைப்பையை (ஓவரி) நீக்கி விட்டீர்களா என்பதை சொல்லவில்லையே.. வயது 40 தான் என்பதால் அதை நீக்கியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது. கர்ப்பப்பையில் என்ன கோளாறு என்பதையும் குறிப்பிடவில்லை. ரத்தப்போக்கு மிதமாக அவ்வப்போது இருந்தால் பயப்பட வேண்டாம். அதிகமானால் ஏற்கெனவே ஆபரேஷன் காரணமாக ஏதாவது பிரச்னைகள் ஏற்பட்டிருக்கிறதா என்பதை பரிசோதித்து சிகிச்சை மூலம் நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்.

இந்த வயதிலும் வரலாம்
என் மகளுக்கு 4 வயது. ஒவ்வொரு மாதமும் அவளுக்கு மாதவிலக்கு போல சிறிதளவு ரத்தக் கசிவு ஏற்படுகிறது. அவள் வயதுக்கு வந்துவிட்டதாக எடுத்துக் கொள்ளவா? இந்த வயதிலேயே அது சாத்தியமா? பயமாக இருக்கிறது. நாங்கள் என்ன செய்ய வேண்டும்? மருத்துவ வசதியே இல்லாத ஊரில் இருக்கும் எனக்கு சரியான ஆலோசனை தாருங்கள். 
நான்கு வயதில் கூட வயதுக்கு வந்த குழந்தைகள் உண்டு. இதை விரைவு படுத்தப்பட்ட பூப்பெய்தல் என்பார்கள். நீங்கள் முதலில் கவனிக்க வேண்டியது மார்பக வளர்ச்சி, உடல் வளர்ச்சி, மறைவிடங்களில் முடி வளர்ச்சி இருக்கிறதா என்பதை. இந்த மாற்றங்கள் இல்லாமல் நீங்கள் குறிப்பிடுவது போல சிறிதளவு ரத்தக் கசிவு அவ்வப்போது ஏற்படுவது நுண்கிருமி தாக்குதல் எனப்படும் வெஜைனைட்டிஸ் (Vaginitis) ஆகக் கூட இருக்கலாம். இதற்கு மிக சாதாரண சிகிச்சையே தேவைப்படும். அதே சமயம் நான்கு வயதிலேயே முழு வளர்ச்சி தென் பட்டால் உடலில் அளவுக்கு அதிகமான ஹார்மோன்கள் சுரக்கிறதா என்றும், அதற்கு என்ன காரணம் என்றும் மருத்துவரிடம் காட்டி தெரிந்து கொள்வது நலம். அரசு மருத்துவமனையிலோ குழந்தை நல மருத்துவரிடமோ பரிசோதியுங்கள்.

எனக்கு இரண்டு குழந்தைகள். இரண்டாம் பெண் குழந்தை பிறந்த இரண்டாம் நாள் அதற்கு லேசான வெள்ளைப் படுதல் இருப்பதை கவனித்தேன். இது ஏதாவது நோயின் அறிகுறியோ? 
நிச்சயமாக நோய் அறிகுறி இல்லை. குழந்தைக்கு வெள்ளை படுவது மிக சாதாரண விஷயம்தான். பிறப்புறுப்பில் ரத்தம் வருவதுகூட இயற்கை. தாயின் உடலில் சுரந்த ஹார்மோன்கள் ஓரளவுக்கு குழந்தையின் ரத்தத்தில் கலந்து விடுவதால் இது ஏற்படுகிறது. ஆனால், சில மணி நேரங்கள் அல்லது சில நாட்களில் இது நிற்காவிட்டால் மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும்.

அந்த நேரம் உடலுறவு வேண்டாமே 
எனக்கு மாதவிலக்கின்போதுதான் உடலுறவு கொள்ளும் ஆசை அதிகமாக ஏற்படுகிறது. ஆனால், கணவரோ அது தப்பு என்று கூறி ஒதுக்குகிறார். எனக்கு ஏன் அப்படி ஆசை வருகிறது?
அந்த நேரத்தில் உறவு கொள்வது சரியா, தவறா? ?

பொதுவாக பெண்களுக்கு மாதவிலக்கின்போது தாம்பத்ய உணர்வு மிகவும் குறைவாக இருக்கும். நீங்கள் விதி விலக்கு போலும். ஆசை ஏற்படுவதில் தவறொன்றும் கிடையாது. அந்த நேரத்தில் உடலுறவு கொண்டால் கிருமித் தொற்று ஏற்பட வாய்ப்பு உண்டு. முக்கியமாக எண்டோமெட்ரியோசிஸ் (Endometriosis) என்ற நோய் வர வாய்ப்புள்ளது. அதாவது உதிரம் உடலுக்குள் சென்று கர்ப்பப்பை குழாய் வழியாக வெளியே வந்து படிந்து கர்ப்பப்பையை சுற்றியுள்ள இடங்களில் ரத்தக் கட்டிகளாக படிந்துவிடுவது.. மாதவிலக்கு காலத்தில் உடலுறவு கொள்வதால் இத்தகைய நிலை வரலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே மிக அத்தியாவசியமாக இருந்தாலன்றி அந்த நாட்களில் தவிர்க்கலாமே!

பின்னாளில் பாதிப்பு 
எனக்கு மாதவிலக்கு காலங்களில் அதிக உதிரப்போக்கு இருந்ததால் டாக்டர் கருத்தடை மாத்திரையை உபயோகிக்கச் சொன்னார். தொடர்ந்து இவற்றை உபயோகிப்பதால் பிற்காலத்தில் கர்ப்பப்பை தொடர்பான பிரச்னைகள் ஏதேனும் வர வாய்ப்புள்ளதா? 
அதிக உதிரப் போக்குக்கு கருத்தடை மாத்திரை உபயோகிப்பது சரியானது. ஆனால், அதை மருத்துவரின் ஆலோசனையுடனும், குறிப்பிட்ட காலம் வரையிலும்தான் உபயோகிக்க வேண்டும். மருத்துவர் அந்த மாத்திரைகளை தருமுன் அதனால் பக்க விளைவுகள் ஏதேனும் ஏற்படுமா என்று உங்களை பரிசோதித்து, உங்கள் பரம்பரை நோய்களை பற்றி தெரிந்து கொண்டு கொடுப்பார். அதிக நாட்கள் சாப்பிடுவதாலும் ஆலோசனை இன்றி சாப்பிடுவதாலும் சிலருக்கு கர்ப்பப்பை புற்றுநோய் வர வாய்ப்புள்ளது. கருத்தடை மாத்திரை என்றவுடனே பயந்துவிட வேண்டாம். மணமாகாத பெண்களுக்குகூட அதிக உதிரப்போக்கு, ஒழுங்கற்ற உதிரப்போக்கு, ஒழுங்கற்ற சுழற்சி போன்ற பிரச்னைகளுக்கு இந்த மாத்திரைகள் தரப்படுகின்றன. மேலே சொன்னவற்றுக்கெல்லாம் காரணம் ஹார் மோன்கள் குறைபாடு. அந்த ஹார் மோன்களை மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்கிறோம். அவ்வளவுதான்.

டீன் ஏஜ் கவனிக்கவும்
மாதவிலக்கு நாட்களில் டீன் ஏஜ் பெண்கள் பின்பற்ற வேண்டிய முறைகள் என்னென்ன? 
டீன் ஏஜில் பெண்களுக்கு சுகாதாரமில்லாமல், நுண் கிருமிகளின் தாக்குதல் ஏற்பட்டால் அதனால் பிற்காலத்தில் அவர்களின் குடும்ப வாழ்க்கையிலும் குழந்தை பிறப்பிலும் பிரச்னைகள் ஏற்படலாம்.
துணியைவிட இந்நேரத்தில் நாப்கினை உபயோகிப்பதுதான் நல்லது. சுகாதாரமானது, வசதியானது. நாப்கின் வாங்க வசதியில்லை என்பவர்கள், ஈரத்தை உறிஞ்சும் தன்மை அதிகமுள்ள மெல்லிய பருத்தித் துணிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அதிக நீளம், தடிமனாக இல்லாமல், நாப்கின் அளவிற்கே இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங் கள். இதனை உள்ளாடைக்குள் (பேன்டீஸ்) வைத்துக்கொள்வதே பாதுகாப்பானது. நழுவிவிடும் என்ற பயம் இருக்காது. மேலாடையில் கறைபடாமலும் இருக்கும்.

இதனை நாள் முழுவும் வைத்திருக்காமல், ஓரளவு ஈரம் உறிஞ்சியதுமே எடுத்து சுத்தமாக துவைத்து வெந்நீரில் அலசி, காற்றோட்டமும் சூரிய வெளிச்சமும் உள்ள இடத்தில் உலரவைத்து உபயோகிக்க வேண்டும்.
நாப்கின் உபயோகிக் கும்போது அதை கவரிலிருந்து கை, அழுக்கு படாமல் எடுத்து பிறப்புறுப்பை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்பு வைத்துக் கொள்வதுதான் சரியான முறை. அந்த நாப்கின் முழுவதும் நனைந்த பிறகு அடுத்தது மாற்றலாம் என்று இருந்துவிடக் கூடாது. ஓரளவு நனைந்ததுமே மாற்றிவிட வேண்டும். லேசாக உதிரம் பட்டாலும்கூட ஒரே நாப்கினை அதிக நேரம் வைத்திருக்கக்கூடாது. முக்கிய விஷயம், உபயோகித்த நாப்கினை அப்படியே வீசி விடாமல், தண்ணீரில் சுத்தம் செய்து, கறையை நீக்கி அதை ஒரு கவரில் போட்டு குப்பை தொட்டியில் போட வேண்டும். இது மற்றவர்களின் ஆரோக்யத்துக்கும் நாம் மதிப்பு தரும் முறை.

அந்த நாட்களில் டென்ஷன், கோபம் ஏற்படுவது இயற்கை. இப்படி 200-க்கு மேல் மாற்றங்கள் ஏற்படுகின்றனவாம். ஹார்மோன்கள் அதிகரிப்பு, சில வைட்டமின்கள் குறைபாடு (G.L". B6), வேலைப்பளு இவைதான் அதற்கு காரணம். ஆதரவான அன்பான சூழ்நிலையை ஏற்படுத்தினால் பலன் கிடைக்கும்.

சாப்பாடு முக்கியம்
மாதவிலக்கு நாட்களில் என்ன மாதிரியான உணவு சாப்பிட வேண்டும்? உணவுப் பொருட்களுக்கும், உதிரப்போக்கு, வலி, மனநிலை ஆகியவற்றுக்கும் தொடர்பு உண்டா?
அப்போது சாப்பிடும் உணவு வகைகளுக்கும், உதிரப்போக்கு, வலி ஆகியவற்றுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. சிலருக்கு அந்த சமயத்தில் லேசான வயிற்றுப்போக்கு ஏற்படும் என்று முன்பே கூறியிருந்தேன். அதோடு அந்த சமயத்தில் குடல், ஜீரண மண்டலத்தின் இயக்கம் சற்று மந்தமாக இருக்கும். அதனால் அதிக காரம், எண்ணெய் சேர்த்த, அஜீரணக் கோளாறுகளை உண்டாக்கக் கூடிய உணவுகளை தவிர்த்து எளிதில் செரிக்கக்கூடிய உணவுகளையே சாப்பிடுவது நலம். பழங்கள், கீரை வகைகள், காய்கறிகள், இரும்புச்சத்து மிக்க பேரிச்சம்பழம், முருங்கைக்கீரை போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

மாதவிலக்கு நாட்களில் பிறப்புறுப்பில் அதிக முடி இருந்தால் அசவுகர்யமாக இருக்கிறது. ஆனால் அந்த நேரத்தில் முடி நீக்குவது சரிதானா என்று தெரியவில்லை. எந்த முறையில் எப்போது நீக்கலாம்? மென்மையான பிறப்புறுப்பின் மேலான முடிகள் அந்தப் பகுதிக்கு பாதுகாப்பை அளிக்கின்றன. மாதவிலக்கு சமயத்தில் கட்டாயம் முடிகளை நீக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அசவுகரியமாக உணர்ந்தால் நீக்குவதிலும் தவறில்லை. பிறப்புறுப்பு மட்டுமல்ல கை, கால்களில் முடியை நீக்குவதானால்கூட ரேசர் உபயோகிக்கக் கூடாது. அது சருமத்தை கடினமாக்கி முடியை விரைவாகவும், முன்பைவிட கடினமாகவும் வளரச் செய்யும். காயம் ஏற்படவும், இன்பெக்க்ஷன் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இந்த முடிகளை நீக்குவதற்கென்றே கிரீம்கள் உள்ளன. இவற்றை பூசி சற்று நேரம் விட்டுவைத்து பின்னர் பஞ்சு தேய்த்து எடுத்து விடலாம். நேரடியாக பூசக் கூடாது. முதலில் காது மடலுக்கு பின்புறம் சிறிதளவு தடவிப் பாருங்கள். எரிச்சல், தோல் உரிதல், தடிப்பு போன்ற எந்த பக்க விளைவுகளும் ஏற்படாவிட்டால் மற்ற இடங்களில் பயன்படுத்தலாம்.

MONTAG, MÄRZ 01, 2004

No comments: