Wednesday, August 22, 2012


நிம்மதியான வாழ்க்கையை இழக்காதீங்க! நிபுணர்களின் அறிவுரை!!


Disadvantages Illicit Affair
இன்றைக்கு ஊடகங்களின் மிக முக்கிய செய்தியே கள்ளக்காதல் கொலைகளும், தற்கொலைகளும்தான். கணவனோ, மனைவியோ ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் புதிதாக ஒரு காதலில் விழ நேரிட்டால் இரண்டு குடும்பங்களின் நிம்மதியும் கேள்விக்குறியாகிவிடுகிறது. இதுபோன்ற தவறான உறவுகள் ஏற்பட என்ன காரணம், இதனால் எந்தமாதிரியான சிக்கல்கள் எழும் என்று உளவியல் நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்கள்.
இளம் வயதில் காதல் ஏற்படுவது இயல்பானது. அதே சமயம் திருமண வாழ்க்கையில் திருப்தியில்லாமலோ, புதிதாக ஒருவரின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு காதல்வயப்படுவதோ இயற்கைக்கு முரணானது என்கின்றனர். அத்தகைய உறவுக்கு காதல் என்று பெயர் சூட்டினாலும் அதனை சமுதாயத்தில் வெளிப்படையாக யாராலும் தெரிவிக்க முடியாது என்பதே நிபுணர்களின் அறிவுரை.
திருமணம் நடந்து குழந்தைகள் பிறந்த பின்னரும் பிறன்மனை நோக்குவது மோசமானதும் அருவெறுப்பானதும் என்று கூறுகின்றனர். இது வாழ்க்கைத் துணைக்கும், குழந்தைகளுக்கும் துரோகம் இழைக்கும் செயல் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது போன்ற மரபு மீறிய உறவுகள் நீண்ட காலகமாகவே சமூகத்தில் இருந்து வருகின்றன என்றாலும் சமீபத்தில் பல்கிக் பெருகிவிட்டது. முன்பு இந்த உறவுகள் கிசுகிசுச் செய்திகளாக மட்டுமே இருந்தன. இப்போதோ நாளிதழ்களுக்குத் தீனி போடுகின்ற அளவிற்கு வெளிப்படையாகவே நடைபெறுகின்றன என்பதுதான் வேதனை. முன்பு இதனை வெளியில் சொல்ல கூச்சப்பட்டனர். ஆனால் இன்றைய காலத்தில் இதுபோன்ற உறவுகள் வெளியில் தெரிந்தாலும் அதைப்பற்றி அலட்டிக் கொள்வதில்லை.
இன்றைய கள்ளக்காதல்கள் உடல் ரீதியான உறவு என்பதையும் தாண்டி வன்முறையில் முடிகின்றது. முந்தைய கணவன்/ மனைவியைக் கொல்லுதல், கள்ளக் காதலனையோ காதலியோ ஆளை வைத்து தீர்த்துக் கட்டுதல்,உறவுக்கு தடையாக இருக்கும் பிள்ளைகளை பெற்றோர்களே கொல்லுதல் என்ற அளவிற்கு நிலைமை மோசமாகிக் கொண்டே போகிறது.
பொருந்தாத திருமணங்கள் ஏமாற்றத்தில் முடிவடைகின்றன. இறுதியில் தனது விருப்பத்தோடு ஒத்துப் போகின்ற ஒரு துணையைத் தேடிச் செல்கின்றர்கள்.தாம்பத்திய வாழ்வில் திருப்தியுறாத நிலை சிலரை கள்ள உறவுக்கு இட்டுச் செல்கிறது. இதற்கு உடல் மற்றும் மனம் சார்ந்த காரணங்கள் உண்டு.
அன்பு ஆதரவு இல்லாத உறவுகள்,சண்டை சச்சரவு நிறைந்த சூழலில் வாழ்பவர்கள் அன்பைத்தரும் ஒருவனை ஒருத்தியை நாடிச் செல்கின்றனர். மேற்கூறப்பட்ட அனைத்துச் காரணங்களினாலும் திருமண பந்தத்தில் விரிசல் ஏற்படுகின்றன இத்தகைய சூழ்நிலைகளில் உள்ள உறவுகள் வழி தவறுகின்றன. சிலர் ஆடம்பர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு இதுபோன்ற உறவுகளில் ஈடுபடுகின்றனர்.சிலர் தனது துணையை பழிவாங்குவதற்காகவும் கள்ள உறவை நாடுகின்றனர். தனது துணையின் மீதுள்ள கோபத்தை இவ்விதம் வெளிப்படுத்துகின்றனர். என்னதான் ஆண், பெண் இடையே முறை தவறிய உறவுகள் ஏற்பட்டாலும் பாதிக்கப்படுவது என்னவோ பெண்கள்தான்.
வீட்டிற்கு வெளியே கள்ள உறவுக்கான வாய்ப்புகள் அதிகம்.இதில் முதலிடம் வகிப்பது வேலை பார்க்கும் அலுவலகங்களே! எவ்வித தவறான எண்ணமும் இல்லாமல் சாதாரணமாகப் பழக ஆரம்பித்துப் பின்னர் தனது கஷ்டங்களையும், மன உளைச்சல்களையும் பரிமாறுவதுடன் நாளடைவில் குடும்ப ரகசியங்களைப் பேச ஆரம்பித்து விடுகின்றனர். இதுவே கள்ள உறவுகள் ஏற்பட சாதகமாக அமைகின்றது. சில அலுவலகங்களில் உயர் அதிகாரிகள் தமது பொறுப்பின் கீழ் இருக்கும் பெண்களை பதவி உயர்வு, ஊதிய உயர்வு ஆகியவற்றின் மூலம் ஆசைகாட்டியும், இணங்க மறுப்பவர்களை அச்சுறுத்தியும் தமது இச்சைகளுக்கு அடிபணிய வைத்த ஊடகங்களில் அடிபடுகின்றன.
இதுபோன்ற இடைஞ்சல்களை தவிர்க்க ஒருவனுக்கு ஒருத்தி என்ற உறவுமுறையே ஏற்புடையது என்கின்றனர் நிபுணர்கள். கள்ள உறவில் ஈடுபட்டுள்ளவர்கள் எந்த நேரம் யாருக்கு தெரிந்து விடுமோ என்ற அச்சத்துடனே வாழ்வதால் மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. எனவே குடும்ப அமைப்பில் கிடைக்கும் மகிழ்ச்சியும் நிம்மதியும் கள்ள உறவுகளில் ஒரு போதும் கிடைக்காது எனிபது நிபுணர்களின் அறிவுரை. எனவே தற்காலிகமாகக் கிடைக்கும் இன்பத்திற்காக நிலையான இன்பத்தினை இழக்கவேண்டாம் என்றும் கூறுகின்றனர். திருமணம் என்பது புனிதமானது. அது ஒரு அறச் செயல், வழிபாடு, அதனை விளையாட்டாகவும், வேடிக்கையாகவும் எடுத்துக் கொள்வது விபரீதத்தில்தான் முடியும் என்பது நிபுணர்களின் எச்சரிக்கையாகும்.

No comments: