Sunday, October 7, 2012


முப்பதுக்கு மேல் அம்மாவாகும் பெண்களுக்கு!

ரே எதிர்பார்த்து காத்திருந்த அந்த வைபவம் நிகழ்ந்துவிட்டது. ��யெஸ்.. நான் தாத்தாவாகப்போகிறேன்�� என்று ட்விட்டரில் தனது மகிழ்ச்சியை வார்த்தைகளாக்கி இருக்கிறார் பிக் பீ அமிதாப் பச்சன். உலக அழகி ஐஸ்வர்யாராய் பச்சனின் தாய்மையைக் கொண்டாட அவரது வீட்டுக்கு முன் ரசிகர்கள் பூங்கொத்துடன் காத்திருக்க, போனிலும் இன்டர்நெட்டிலும் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் இருக்கிறது. அம்மாவாகப் போகிற ஐஸ்வர்யா ராய்க்கு வயது 38! அவருக்குப் பிறக்கப் போகும் குழந்தை எப்படி இருக்கும் என்ற நம் ஓவியரின் கற்பனைதான் நீங்கள் முதல் பக்கத்தில் பார்த்த குழந்தை படம்!

முப்பது வயதுக்குள் குழந்தை பெறுவதுதான் தாய்க்கும் சேய்க்கும் நலம் என்றாலும் இப்போது முப்பது வயதுக்கு மேல் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்வது சகஜமாகிவிட்டது. இதுபோன்ற நேரத்தில் கர்ப்பிணிகள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என ஆலோசனை தருகிறார் சென்னை எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் சாதனா. அவர் சொல்கிற குறிப்புகள் எல்லாம் ஐஸ்வர்யாராய்க்கு மட்டுமல்ல... அவரைப்போலவே கருவுற்றிருக்கும் அனைத்துப் பெண்களுக்கும்!

��பொதுவாகவே 35 வயதுக்குப் பிறகு கர்ப்பமாவதை �லேட் ப்ரெக்னென்ஸி� அதாவது காலம் தவறிய கர்ப்பம் என்று சொல்வோம். கருவுற்றிருக்கும் பெண்கள் தங்கள் உடல்நலனில் வழக்கத்தைவிட அதிக அக்கறை காட்டவேண்டும் என்றாலும் இப்படி ஐஸ்வர்யா ராய் போல வயதாகி கருவுறும் பெண்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். காரணம் 30 வயதைக் கடந்த பெண்களுக்கு கருவுறுவதில் ஆரம்பித்து பிரசவம் வரை சிக்கல்கள் இருக்கும். முப்பது வயதுக்குப் பிறகு பெண்களுக்கு கருமுட்டை உருவாவது குறைந்து அதனால் கருவுறும் சதவீதமும் குறையும். அப்படியே கருவுற்றாலும் தாய்க்கோ குழந்தைக்கோ பிரச்னைகள் வரலாம். அதனால் கருவுற்ற நாளில் இருந்து ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். தாயின் உணவுதான் குழந்தைக்கான வளர்ச்சி ஆதாரம். அதனால் இரும்புச்சத்து மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். போலிக் அமிலம் குழந்தையின் வளர்ச்சிக்கு அத்தியாவசியம் என்பதால் கருவுற்ற நாளில் இருந்து போலிக் அமில மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். இத்துடன் ஒவ்வொரு மாதமும் மகப்பேறு மருத்துவரை அணுகி பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அவரது வழிகாட்டுதலின்படி மத்திரைகளையும், உணவையும் சாப்பிடுவது நல்லது.

கர்ப்பகாலத்தில் ஓய்வு எடுக்க வேண்டும் என்பதற்காக தினசரி வேலைகளை செய்யாமல் முழுநேரமும் படுத்துக்கொண்டே இருப்பதும் தவறு. அவர்களது வழக்கமான பணிகளை தொடர்ந்து செய்யலாம். அதிக பளு தூக்குவது, மாடிப்படி ஏறுவது போன்ற சிரமமான செயல்களை மட்டும் குறைத்துக்கொள்வது நல்லது. சில பெண்கள் வாய் ஒருமாதிரியாக இருக்கிறது, தலை வலிக்கிறது என்று காரணம் சொல்லிக்கொண்டு அடிக்கடி காபி குடிப்பார்கள். இதைத் தவிர்க்க வேண்டும். காபியில் இருக்கும் கஃபீன் என்ற வேதிப்பொருள், உடலுக்கு நல்லதல்ல. ஆல்கஹால் கலந்த பானங்களைத் தவிர்க்க வேண்டும். முப்பது வயதுக்குப் பிறகு கருவுறும் பெண்கள், மனதளவில் உறுதியுடன் இருப்பார்கள். மகப்பேறு குறித்து மற்றவர்கள் மூலமாக அவர்கள் ஓரளவுக்குத் தெரிந்தும்வைத்திருப்பதால், தைரியத்துடன் பிரசவத்தை எதிர்கொள்வார்கள்.

இவர்கள் மனதளவில் தயாராக இருந்தாலும், உடல் அதற்கு ஒத்துழைக்காது. கர்ப்ப காலத்தில் இவர்களுக்கு ரத்த அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரையின் அளவில் மாற்றம், ஹைப்பர் தைராய்டிசம் போன்றவை ஏற்படலாம். அது வயிற்றில் வளரும் குழந்தையையும் பாதிக்கக்கூடும். அதனால் சமச்சீர் உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் இவற்றை கட்டுக்குள் வைக்க முடியும். சரியாக சாப்பிடவில்லை என்றால் குழந்தை எடைகுறைந்து பிறக்கக்கூடும். அதேபோல சுகப்பிரசவத்துக்கும் இவர்கள் உடம்பு ஒத்துழைக்காது. பெரும்பாலன பெண்களுக்கு அறுவை சிகிச்சை மூலம்தான் குழந்தை வெளியே எடுக்கப்படுகிறது. இதையெல்லாம் தவிர்க்க இவர்கள் போதிய ஆரோக்கியத்துடன் இருப்பது நல்லது.

தாயுடன் சேர்த்து கருவில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியைப் பரிசோதிப்பதும் அவசியம். 10 முதல் 20 வாரங்களுக்குள் வயிற்றில் இருக்கும் குழந்தையின் வளர்ச்சியை ஸ்கேன் செய்து பார்ப்பது அவசியம். எல்டர்லி ப்ரெக்னென்ஸியில் சில சமயம் குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படலாம். அப்படியிருக்கும்பட்சத்தில் அதை கருவிலேயே சரிசெய்யும் அளவுக்கு தற்போது மருத்துவ வசதிகள் பெருகியுள்ளன. அதனால் குழந்தையின் வளர்ச்சியை குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஸ்கேன் செய்ய வேண்டும். முப்பது வயதுக்கு மேல் கருவுறும் பெண்கள் சமச்சீர் உணவு, ஊட்டச்சத்து மாத்திரை, மருத்துவப் பரிசோதனை இவற்றை மகப்பேறு மருத்துவரின் ஆலோசனைப்படி கடைபிடித்து வந்தால் எந்த சிக்கலும் இல்லாமல் பிரசவத்தை எதிர்கொள்ளலாம். வாழ்த்துக்கள்!��

தள்ளிப்போடுவது நல்லதா?

படித்து முடித்து, நல்ல வேலையில் சேர்ந்த பிறகுதான் திருமணம் என பல பெண்கள் முடிவெடுப்பதால், முப்பது வயதுக்குப் பிறகுதான் திருமணமே நடக்கிறது. இன்னும் சிலருக்கு முப்பது வயதுக்குள் திருமணம் முடிந்துவிட்டாலும் சொந்தவீடு, கார் என லட்சியங்களை வகுத்துக்கொண்டு அவற்றை அடைந்தபிறகுதான் குழந்தை என மழலைச் செல்வத்துக்கு நான்கு அல்லது ஐந்தாவது இடத்தைக் கொடுக்கிறார்கள். அப்படியே மீறி கருவுற்றாலும், எங்கே தங்கள் லட்சியம் தடைபட்டுவிடுமோ என குழந்தையை கருவிலேயே அழிப்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதுபோன்ற முடிவுகளால் குழந்தை பிறந்து அதைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு செட்டில் ஆகிற வயதில்தான் பல பெண்கள் கர்ப்பமாகிறார்கள். இது அவர்களை மட்டுமன்றி, பிறக்கும் குழந்தையையும் பாதிக்கும். அம்மா ஆரோக்கியமாக இருந்தால்தான் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கும். அப்படியில்லாமல் ஓடியாடி உழைத்து முடிந்து, உடல் தளர்ந்திருக்கும்போது குழந்தை பிறந்தால், பிறக்கும் குழந்தையும் உற்சாகம் குறைவாகத்தான் வளரும். பொருளாதார காரணங்களுக்காகவோ வாழ்க்கையில் செட்டில் ஆக வேண்டும் என்பதற்காகவோ குழந்தைப்பேறை தள்ளிப்போடுவது தவறு. குழந்தை பெற்றுவிட்ட பிறகு அதே உற்சாகத்தில் அதிவேகத்தோடு லட்சியத்தை நோக்கி நடைபோடலாமே!

No comments: