Sunday, October 7, 2012


பருவம் அடைந்த பெண்களுக்கு என்ன உணவு தேவை?


பருவம் அடைந்த பெண்களுக்கு என்ன உணவு தேவை?
பனைவெல்லம் (கருப்பட்டி), சர்க்கரை, பனங்கிழங்கு, கரும்பு, மஞ்சள்… இப்படி பொங்கலுக்கு பயன்படுகின்ற அத்தனை பொருட்களும் மனிதனை பாதுகாப்பதில் முக்கிய இடம் இருக்கிறது. அதனால் தான், மனநிறைவோடு கொண்டாடுகின்ற பொங்கல் பண்டிகையின்போது, அந்தப் பொருட்களை எல்லாம் படைத்து, தன்னுடைய நன்றியைக் காட்டிக் கொண்டிருக்கிறது இந்த தமிழ் மண்.
”தமிழர்களின் கலாசாரத்தோடு கருப்பட்டிக்கும், சர்க்கரைக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. நம் பாட்டனும், பூட்டனும் தங்கள் தேகத்தை கட்டுமஸ்தாக வைத்துக் கொள்ள இவற்றைத்தான் அதிகமாகச் சாப்பிட்டார்கள். கருப்பட்டி உடலுக்கு வலிமையை யும், குளிர்ச்சியையும் தரவல்லது. அன்றாட உணவில் கருப்பட்டியைச் சேர்த்துக் கொண்டால்… எலும்புத் தேய்மானம், மூட்டுவலி, கருப்பைக் கோளாறு, தசைப்பிடிப்பு,பல் சம்பந்தமான நோய்கள் அண்டாது. காரணம், கருப்பட்டியில் இருக்கும் கால்சியம் சத்துதான்.
தினசரி மிச்சமாகும் சோற்றில் தண்ணீர் விட்டு வைப்பது நம் வீடுகளில் வழக்கம். இதை ‘நீர் ஆகாரம்’ என்பார்கள்; சித்த மருத்துவத்தில் ‘நிசிநீர்’ என்போம். அந்தக் காலத்தில் காலையில் எழுந்ததும் இந்த நீர் ஆகாரத்தை ஒரு மடக்கு குடித்துவிட்டு, கருப்பட்டியை ஒரு கடி கடித்துக் கொள்வார்கள். இது, உடல் சோர்வை ஓட ஓட விரட்டி விடும். பின்னர் வயல் வரப்பில் எவ்வளவுதான் உடலை வருத்தி வேலை செய்தாலும் களைப்பே தட்டாது. கைக்குத்தல் அரிசியையும், கருப்பட்டியையும் கலந்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான ‘வைட்டமின் பி’ சத்து அதிகமாகக் கிடைக்கும்.
கருப்பட்டி கலந்த எள்ளுருண்டையை குழந்தைகளுக்குத் தயார் செய்து கொடுக்கலாம். இது ருசியாக இருப்பதுடன், சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் பல் சொத்தை போன்ற எந்தத் தொந்தரவையும் தராது. சுக்கு கருப்பட்டி, கருப்பட்டி பணியாரம், சத்துமாவு போன்ற பாரம்பரிய உணவுகள், குழந்தைகளின் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகமாக்கும்.
பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் கலந்து உளுந்தங்களி செய்து கொடுக்கலாம். இது அவர்களின் இடுப்புக்கும், கருப்பைக்கும் ஆரோக்கியத்தைக் கொடுக்கும். குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுக்கு, மிளகு, கடுகு, வெந்தயம், ஓமம் உள்பட 11 மருத்துவ குணங்கள் கொ ண்ட மூலிகைகளோடு கருப்பட்டி அல்லது சர்க்கரையை சேர்த்துக் கொடுத்தால், அவர்களுக்கு பால் சுரப்பு அதிகமாவதுடன் கருப்பைக்கும் பலத்தைத் தரும்.
”சர்க்கரையும் அதி அற்புதமான மருந்துதான். வாந்தி, பித்தம், நாக்கு சுவையின்மை இவற்றைப் போக்கும் ஆற்றல் அதற்கு உண்டு. உணவுப் பொருட்களை கெடாமல் பாதுகாப்பதற்கும் ஜலதோஷத்தை போக்குவதற்கும் பாரம்பரியமாகவே தமிழர்கள் சர்க்கரைப் பாகைத்தான் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
சர்க்கரைக்கே இவ்வளவு சத்து இருக்கும் போது, அதன் மூலப் பொருளான கரும்பில் எவ்வளவு இருக்கும்? தொடர்ச்சியாக விக்கல் உள்ளவர்களுக்கு மூன்று சொட்டு கரும்புச் சாறைக் கொடுத்தால் அது நின்று விடும். மஞ்சள்காமாலை நோய் வந்தவர் கள் கரும்புச் சாறு குடித்தால் உடலுக்கு நல்ல குளிர்ச்சி யைத் தரும்.
சீஸனில் மலிந்து கிடக்கும் சிறுகிழங்கு, மூக்கிழங்கு, சீனிக்கிழங்கு, குடி கிழங்கு , கருணைக் கிழங்கு, சேனைக் கிழங்கு என்று அத்தனையும் சத்தான சமாசாரங்களே..! இவற்றையும் பொங்கலோடு சேர்த்துச் சமைத்து மரியாதை காட்டுகிறார்கள் தமிழ் மக்கள்.
”விவசாயத்தையும், விவசாயிகளையும் தாங்கிப் பிடிக்க தமிழர்கள் தந்து விட்டுச் சென்றிருக்கும் பண்டிகைதான் பொங்கல். அதைக் கொண்டாடுகிறோம் என்ற பெயரில், பாரம்பரிய உணவுகளையும் ஆண்டுக்கு ஒரு முறை சமைப்பது என்று நம்முடைய உணவையும் மாற்றிக் கொண்டுவிட்டோம். இனியாகிலும்… அடிக்கடி இத்தகைய உணவுகளை சமைப்போம்… நம் உடல் நலத்தை உறுதியாக்குவோம்!

No comments: